போதுமான அளவுக்கு பண்ணியாச்சு.. சுப்ரீம் கோர்ட்டில் காரசாரமாக மோதிக்கொண்ட கபில் சிபல் & துஷார் மேத்தா
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான கபில் சிபலும், அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தாவும் காரசாரமாக வாதம் செய்தனர்.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவரது நீதிமன்ற காவல் வருகிற 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு: முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி அமலாக்கத்துறை சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று: இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி, அவரது மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இன்று வழக்கு விசாரணையின் போது, பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என வாதிட்டார். அதேபோல், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிப்பது தங்களுக்குள்ள சட்ட உரிமை என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
காரசார வாதம்: பின்னர், கபில் சிபல் விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க கோரிய போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு போதுமான வசதிகள் சலுகைகள் கிடைத்துவிட்டன என்றார். அதற்கு கபில் சிபல், அமலாக்கத்துறை போதுமான அளவுக்கு அவமதித்து விட்டது என பதிலடி கொடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், வாதங்களை சுருக்கமாக முடிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வரும் ஜூலை 26ஆம் தேதி வரை, நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்ற அமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜியை தற்போதைக்கு காவலில் எடுத்து விசாரிக்க மாட்டோம், அவர் மீதான 15 நாள் நீதிமன்றக் காவல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை விசாரணை நடக்காது என உறுதியளித்தது.












Click it and Unblock the Notifications