காவிரி விவகாரம்.. இன்று மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக குழு.. உடனே டெல்லி புறப்படும் சித்தராமையா
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான எம்பிக்கள் மத்திய அமைச்சரைச் சந்தித்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை டெல்லிக்கு விரைகிறார்.
கர்நாடகாவிடம் இருந்து காவிரி மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய நீரை ஒவ்வொரு ஆண்டும் பெறுவதே போராட்டமாக இருந்து வருகிறது. இந்தாண்டும் கூட அதே நிலை தான் தொடர்கிறது. கர்நாடகா நீரைத் தர மறுத்தே வருகிறது.

தமிழ்நாட்டில் டெல்டா பசானத்திற்காக இந்தாண்டு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. சில காலம் இந்த உத்தரவின்படி நீர் திறக்கப்பட்டாலும் கூட சில வாரங்களுக்கு முன்பு திடீரென நீர் தருவதை நிறுத்தியது.
காவிரி நீர்: இதற்கிடையே நடந்த காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் 2ஆம் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை வழங்கப் பரிந்துரைத்தது. இருப்பினும், தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்கக் கர்நாடகா மறுத்த நிலையில், அங்குப் போராட்டங்களும் நடந்தது.
இந்தச் சூழலில் காவிரியில் இருந்து நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு வலியுறுத்தி தமிழ்நாடு நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பி குழு டெல்லி சென்றனர். இன்று காலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பி குழு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட வலியுறுத்தியது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழகத்திற்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்குத் துளியும் இல்லை என்று சாடினார். மேலும், கர்நாடகாவிடம் போதுமான தண்ணீர் இருந்து தமிழகத்திற்குத் தர மறுக்கிறது என்றும் உத்தரவுகளைக் கர்நாடகா முறையாகப் பின்பற்றவில்லை என ஷெகாவத்திடம் முறையிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நாளை டெல்லி செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்லும் கர்நாடக முதல்வர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.. நாளைய தினம் டெல்லியில் கர்நாடக அனைத்து கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.. காவிரி விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் அணைகளில் தண்ணீர் இல்லை என்பதைப் பிரதமரிடம் கர்நாடக அனைத்து எம்பிக்கள் குழு வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக எம்பிக்கள் சந்தித்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை டெல்லிக்குச் செல்வது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications