தனியாக போன டிகேஎஸ் டீம்.. மத்திய அமைச்சருடன் மீட்டிங்! காவிரி மேட்டரில் மூழ்கிய கர்நாடக அரசு
டெல்லி: நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்பிக்கள் மத்திய அமைச்சரை சந்தித்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தலைமையிலான அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டு இருந்தது.

தமிழ்நாட்டிற்குஅந்த நீரையும் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு தொடந்து விடாபிடியாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம், இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவில் இருந்து இதுவரை வந்த தண்ணீரில் பெரிய அளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்ததாகும். அவற்றில் பெரும்பாலானவை மழை காரணமாக திறக்கப்பட்ட உபரிநீர் என்று கூறப்படுகிறது. காவிரி ஒழுங்குமுறை குழு தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டது. அந்த நீரின் மொத்த அளவு 6.25 டி.எம்.சிதான். ஆனால், கர்நாடகா அணைகளில் 63.80 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட்டினார். மறுபக்கம் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்கள் முழுமையாக கருகி பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிகளுடன் நேற்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.

இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில், கர்நாடகாவில் மழை பெய்தால் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக விளக்கமளித்தார். இந்த நிலையில் இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா டெல்லிக்கு சென்று கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேச உள்ளார்.
முன்னதாக இன்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் ஜெயசந்திரா, டிகே சுரேஷ், ஜிசி சந்திரசேகர் உள்ளிட்டோர் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications