நான்தான் டாப்பு.. எனக்கு சமம் யாரு.. காங்கிரஸ் மேலிடத்திடம் டி.கே.சிவகுமார் நேரிலேயே எச்சரிக்கை
டெல்லி: கர்நாடகாவில் தமக்கு இணையாக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்கவே கூடாது என காங்கிரஸ் மேலிடத்தில் துணை முதல்வர் டிகே சிவகுமார் நேரில் வலியுறுத்தி இருக்கிறார் என்கின்றன தகவல்கள். அத்துடன் முதல்வர் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் டெல்லி மேலிடத்தில் துணை முதல்வர் டிகே சிவகுமார் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. அப்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையா- டிகே சிவகுமார் இடையே பெரும் போட்டி இருந்தது. அப்போது தலையிட்ட டெல்லி மேலிடம், சித்தராமையா- டிகே சிவகுமார் இருவரும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி சுமூகத் தீர்வை உருவாக்கியது.

தற்போது டிகே சிவகுமார் தரப்பு, முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது. டிகே சிவகுமாருக்கு ஆதரவாக ஒக்கலிகா ஜாதி மடாதிபதி அரசு விழாவிலேயே சித்தராமையா முன்னிலையிலேயே முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு விட்டுத்தர வலியுறுத்தியது பெரும் சர்ச்சையானது. இன்னொரு பக்கம் டிகே சிவகுமார் பலத்தைக் குறைக்க அவருக்கு இணையாக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகா காங்கிரஸ் அரசானது சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், டிகே சிவகுமார் ஆதரவு அமைச்சர்கள் என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
இந்த பின்னணியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேற்று டிகே சிவகுமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர்களை ஒருபோதும் நியமிக்க கூடாது; அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தாராம் டிகே சிவகுமார். மேலும் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் மல்லிகார்ஜூன கார்கேவிடம் டிகே சிவகுமார் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. டிகே சிவகுமாரின் இந்த புகாரால் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications