பிரதமர் மோடியுடன் கர்நாடகா ஆளுநர் தவார்சந்த் கெலாட் திடீர் சந்திப்பு.. துணை ஜனாதிபதி வேட்பாளர்?
டெல்லி: கர்நாடகா மாநில ஆளுநரான தவார் சந்த் கெலாட் பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசினார். இதனையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளராக தவார் சந்த் கெலாட்டை பாஜக அறிவிக்கக் கூடும் என்ற யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக முன்னிறுத்தக் கூடும் என்கிற கருத்து பலமாக அடிபடுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு?
வெங்கையா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் தென்னிந்திய மாநில கட்சிகள் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியர் என்ற ஒற்றை காரணத்துக்காக ஆதரிக்கக் கூடும் என்பது பாஜகவின் கணிப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னையில் கடந்த வாரம் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி மூலம் வெங்கையா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக்கினால் திமுக நிச்சயம் ஆதரவு தரும் என்கிற பேச்சுகளும் எழுந்திருக்கின்றன.

குலாம் நபி ஆசாத்
மேலும் துணை ஜனாதிபதியாக தலித் அல்லது முஸ்லிம் ஒருவரை பாஜக முன்னிறுத்தக் கூடும் என்பது நீண்டகால பேச்சு. பாஜகவுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் நெருக்கமாக இருந்ததால் அவரது பெயரும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபட்டது. ஆனால் திடீரென காங்கிரஸ் தலைமையுடன் குலாம் நபி ஆசாத் சமாதானமாகிவிட்டதால் இப்போது அவரது பெயர் அடிபடுவதில்லை.

முக்தர் அப்பாஸ் நக்வி
இந்த நிலையில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கவில்லை பாஜக. அதேநேரத்தில் ஜூன் 23-ந் தேதி உ.பி. ராம்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இன்னொரு தரப்போ, துணை ஜனாதிபதி வேட்பாளராக முக்தர் அப்பாஸ் நக்வியை பாஜக நிறுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிற பேச்சுகளும் எழுந்தன.

தவார் சந்த் கெலாட்
இந்நிலையில் பிரதமர் மோடியை கர்நாடகா மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட் சந்தித்து பேசியிருப்பது புதிய யூகங்களுக்கு வித்திட்டுள்ளன. பிரதமர் மோடியை தவார் சந்த் கெலாட் சந்தித்துவிட்டு திரும்பினாலோ அவருக்கு ஒரு பதவி காத்திருக்கிறது என்பதுதான் கடந்த கால வரலாறு. பிரதமர் மோடியை சந்தித்துவிட்ட திரும்பிய காலங்களில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது; ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது; கர்நாடகா ஆளுநர் பதவி கிடைத்தது. இதனடிப்படையில் தற்போதைய சந்திப்பின் மூலம் தவார் சந்த் கெலாட், பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பாரோ என்கிற சந்தேகமும் கிளம்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications