ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு கெடு இல்லை.. தற்காலிகமாக தப்பும் கர்நாடக அரசு
டெல்லி: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சந்தித்து, தேவைப்பட்டால் ராஜினாமா கடிதம் கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, கர்நாடக அரசியல் கலாட்டா இன்றே முடிவுக்கு வருமா என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுவதுதான். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இன்றைய தினம் மாலை 6 மணிக்குள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கலாம் என்றுதான் உச்ச நீதிமன்றமே கூறியுள்ளதே தவிர, இன்றே அந்த ராஜினாமா கடிதம் மீது ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம், சபாநாயகருக்கு உத்தரவிடவில்லை.

எனவே சபாநாயகர் தனது முடிவை எடுக்க கால வரைமுறை இல்லை. பொதுவாக சபாநாயகருக்கு அப்படியான உத்தரவிடுவது மரபு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு சட்டசபை மீது முழு அதிகாரம் உள்ளது. எனவே பொதுவாக சபாநாயகரின் பணிகளில் நீதிமன்றம் தலையிடுவது கிடையாது. சபாநாயகரின் முடிவுகள் சரியா, தவறா என்பது தொடர்பான வழக்குகளில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். சபாநாயகர் எப்படி செயல்பட வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டுவது கிடையாது.
எனவே, அரசின் ஆயுட்காலம் நீள்வது தற்போது சபாநாயகர் கையில் உள்ளது. இன்று மாலைக்குள் தன்னை சந்திக்க உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தும்போது அதை வீடியோவாக பதிவு செய்யவும் சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.
தனது அலுவலகத்திற்கு அவர் மாலை வந்தபோது, வீடியோகிராபரையும் அழைத்து வந்துள்ளார் சபாநாயகர். தான் எடுக்கப்போகும் முடிவு, வரலாறாக மாறும் என இரு தினங்கள் முன்பே சபாநாயகர் கூறினார். அதற்கு ஏற்ப ரமேஷ் குமார் முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு கர்நாடக அரசியலில் உள்ளது.












Click it and Unblock the Notifications