முதலில் நீங்க திருந்துங்க.. அமெரிக்கா, பிரிட்டனை வெளுத்துவிட்ட ஜெய்சங்கர்! பாகிஸ்தானையும் விடலையே
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மட்டுமின்றி அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் ரைசினா உரையாடல் 2025 நிகழ்ச்சியில் பேசிய அவர் காஷ்மீர் விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் சமமாக மதிப்பீடு செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகள் யார்? பிரிட்டன், கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்காவா? என்று கடுமையாக சாடினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அப்ஸர்வசர் ரீசர்ச் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து டெல்லியில் ரைசினா உரையாடல் 2025-யை நடத்தி வருகின்றன. இதன் முக்கிய நோக்கம் என்பது சர்வதேச அளவிலான புவிசார் அரசியல் - பொருளாதாரம் உள்ளிட்டவை பற்றி உலக நாடுகள் அனைவரும் சேர்ந்து விவாதிப்பதாகும்.

இதில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் மோடி ஆகியோர் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் கியூபா, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், மாலத்தீவு, பூடான், ஹங்கேரி, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஸ்வோவேனியா உள்பட பல்வேறு நாடுகளின் துணை பிரதமர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ரைசினா உரையாடல் நேற்று தொடங்கியது. நாளையுடன் முடிவடைய உள்ளது. இதன் 2வது நாள் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை கடுமையாக விளாசினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளின் செயல்களையும் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:
நாம் அனைவரும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம். இது ஒரு முக்கிய கொள்கை. அதோடு உலக நாடுகள் மத்தியில் இது முக்கிய விதிகளின் அடித்தளமாக இருக்கிறது. 2ம் உலகப்போருக்கு பிறகு நமக்கு சொந்தமான காஷ்மீர் பகுதியை மற்றொரு நாடு நீண்டகாலமாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவிற்கு சென்றோம். அப்போது Invasion (படையெடுப்பு) என்பது சர்ச்சையாக மாற்றப்பட்டது.
குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் சமமாக மதிப்பீடு செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகள் யார்? இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்காவா? மன்னிக்கவும், இந்த விஷயத்தில் எனக்கு சில கேள்விகள் உள்ளன. இன்று நாம் நாடுகளுக்கு இடையேயான அரசியல் தலையீடு பற்றி பேசுகிறோம். மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளுக்குள் செல்லும்போது, அது ஜனநாயக முறையில் சுதந்திரங்களை பின்பற்றுவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளின் விவகாரங்களில் தலையீடும்போது அது கெட்ட நோக்கத்தை கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் நமக்கும் ஒரு ஒழுங்கு, நியாயம் என்பது வேண்டும்.
நமக்கு வலுவான ஒரு ஐநா சபை வேண்டும். அதோடு நியாயமாக செயல்படும் ஐநா சபை வேண்டும். உலகளாவிய விஷயங்களில் சில அடிப்படை நிலைத்தன்மை அவசியம் வேண்டும். நமக்கு கிழக்கு நாடாக உள்ள மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை உள்ளது. கடந்த 8 தசாப்தங்களாக உலகின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்வதும், அதில் நேர்மை இருந்ததா என்பதை புரிந்து கொள்வது முக்கியம். இதுதொடர்பாக வேறு ஒரு உரையாடல் என்பது தேவையாக உள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்நாடுகளின் ஒழுங்கை போல் வெளிநாடுகளும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும். பொதுவாக ஒரு நாட்டின் ஒழுங்கற்ற தன்மை என்பது அந்த நாட்டின் பலனை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். ஆபத்தான நாடு என்பதற்கு ஒரு நாடு பெரிதாக இருக்க வேண்டும் என்பது இல்லை. சிறிய நாடாக கூட இருக்கலாம்'' என்று விமர்சனம் செய்தார். அதாவது காஷ்மீர் பிரச்சனையில் 1947 ல் ஐநா தலையிட்டது. அப்போது ஐநாவில் செயல்பட்ட பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் செயல்பாடு என்பது இந்தியாவுக்கு எதிராக அமைந்தது. இதனை தான் ஜெய்சங்கர் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்கா அதிக வரிகளை விதிக்க உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகளவில் வரி விதிக்கிறது. அதேபோல் பதிலுக்கு பதில் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இப்படியான சூழலில் தான் காஷ்மீர் விவகாரத்தில் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதலில் நீங்கள் திருந்துங்கள் என்ற வகையில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை விமர்சனம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications