டெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் 'அப்பவே அதை' செய்திருக்கனும்..ஆம் ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக எடுத்த காலதாமதமான முடிவுதான் என்கிறார் ஜன சுராஜ் கட்சித் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. பாஜக 27ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் ஆட்சியை அமைக்கிறது.

டெல்லி தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் 'இந்தியா கூட்டணியாக' இணைந்து களம் கண்டிருந்தால் பாஜகவால் வெல்ல முடியாமல் போயிருக்கும் என்பது பொதுவான கருத்து. 16 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கும்; ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் தேர்தல் புள்ளி விவரங்களை முன்வைத்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் வியூக வல்லுநரான ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்; ஜாமீனில் வெளி வந்து பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எந்த ஒரு தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லை.
அதேபோல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அதீதமாக முன்னுரிமை கொடுத்துவிட்டார் கெஜ்ரிவால். டெல்லியை கவனித்த பிறகு ஓய்வான நேரங்களில் பிற மாநிலங்களில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதேபோல 'இந்தியா கூட்டணி'யில் ஆம் ஆத்மி இருக்கிறதா? இல்லையா? என்கிற ஒரு குழப்பத்தையும் அக்கட்சி உருவாக்கி வைத்திருந்தது. இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம் பெற்று சில போராட்டங்கள நடத்தியது; அதே நேரத்தில் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன. இதனால் ஆம் ஆத்மியின் இந்தியா கூட்டணி குறித்த நிலைப்பாடு குழப்பமான நிலையை வாக்காளர்களிடத்தில் உருவாக்கி வைத்திருந்தது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.












Click it and Unblock the Notifications