குவைத்தில் 2 ஆண்டுகளில் 1400 இந்தியர்கள் மரணம்.. பாதுகாப்பை உறுதி செய்ய வலுக்கும் குரல்கள்!
டெல்லி: குவைத் தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியான நிலையில் வெளிநாடுகள் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
குவைத்தின் 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 இந்தியர்கள் மரணம் அடைந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குவைத் தீ விபத்தில் பலியான இந்தியர்களில் 12 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலைமையை அறிய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது இரங்கல் செய்தியில் இதனை வலியுறுத்தி இருந்தார்.
குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் மரணம் அடைந்ததாக நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 2022-ம் ஆண்டு 731 இந்தியரும் 2023-ல் 708 இந்தியரும் குவைத்தில் மரணம் அடைந்தனர் என்பது மத்திய அரசின் தகவல். 2020, 2021-ம் ஆண்டு கொரோனா காலங்களில் 2500க்கும் அதிகமானோர் மரணம் அடைந்திருந்தனர்.
இதற்கு முன்னர் 2014 முதல் 2018 -ம் ஆண்டு காலப் பகுதியில் 2932 இந்தியர்கள் குவைத்தில் மரணம் அடைந்தனர். 2018-ல் மட்டும் 659 இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.
பக்ரைன், கத்தார், சவுதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் 33252 புகார் மனுக்களை தூதரகங்களிடம் கொடுத்திருந்தனர். இதில் 16436 புகார்கள், குவைத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டிருக்கின்றன. இந்தியர்களுக்கான ஊதியத்தை தராமல் ஏமாற்றுதல், ஊதியத்தை நிறுத்தி வைத்து காலதாமதம் செய்வது உள்ளிட்டவை இந்த புகார்களில் பெரும்பாலானவை ஆகும்.
தற்போது 43 இந்தியர்களை பலி கொண்ட குவைத் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடமும் இந்தியருக்கு சொந்தமானது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான இக்கட்டிடத்தில்தான் 150க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இக்கட்டிட உரிமையாளரை கைது செய்ய குவைத் அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications