எல் முருகனுக்கு நாடாளுமன்ற விதிமுறைகள் தெரியவில்லை.. திமுக எம்பி டிஆர் பாலு விமர்சனம்
டெல்லி: மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு நாடாளுமன்ற விதிமுறைகள் தெரியவில்லை என திமுக எம்பி டி ஆர் பாலு விமர்சித்துள்ளார். மேலும் அண்ணாமலை தன்னடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் டி ஆர் பாலு கூறினார்.
இன்று லோக்சபாவில் தமிழக வெள்ள பாதிப்பு குறித்த விவாதம் நடந்தபோது, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், எம்பியுமான டிஆர் பாலு, தமிழகத்தில் மழை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து கூறவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது.

வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என பேசி கொண்டிருந்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட முயன்றார். ஆனால் அவரை உட்காரும்படி டி ஆர் பாலு கூறினார். எனினும், எல் முருகன் சில கருத்துகளை முன்வைக்க முயன்றார். அப்போது டிஆர் பாலு கடும் கோபமடைந்து உட்காரும்படி கூறினார். ஆனால் எல் முருகன் தொடர்ந்து பேச முயன்றார்.
இதனால் டென்ஷன் ஆன டிஆர் பாலு, ‛‛நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit (தகுதியில்லாதவர்)'' என கூறினார். டிஆர் பாலுவின் இந்த பேச்சுக்கு லோக்சபாவில் ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் உள்ளிட்டவர்கள் டிஆர் பாலுவுக்கு எதிராக பேசினர்.
ஒரு தலித் அமைச்சரை எப்படி Unfit என சொல்லலாம்? ஒட்டுமொத்த தலித் சமூகத்தையே டிஆர் பாலு அவமானப்படுத்திவிட்டார். உடனடியாக டிஆர் பாலு மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக மற்றும் பாஜகவினர் இடையே வார்த்தை போர் நீடித்தது. இது குறித்து எல் முருகன் கூறுகையில், "வெள்ள பாதிப்பு குறித்து திமுக எம்பி டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்தார்.
இதனால் தான் நான் குறுக்கீடு செய்தேன். அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்கட்டும் என டிஆர் பாலு கூறி இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை Unfit என்று கூறினார். என்னை Unfit என கூறியதன் மூலம் திமுகவினரின் உண்மை நிலையை உணர முடிகிறது" என்று கூறினார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு நாடாளுமன்ற விதிமுறைகள் தெரியவில்லை என டி ஆர் பாலு விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி ஆர் பாலு கூறியதாவது:- மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு நாடாளுமன்ற விதிமுறைகள் தெரியவில்லை. தமிழகத்திற்கு உரிய நிதி தரவில்லை என்பது தான் பிரச்சினை. நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் தான் பதில் கூற வேண்டும். இதற்கு பதில் தரக்கூடிய அமைச்சர் வரவில்லை. அண்ணாமலை தன்னடக்கத்துடன் பேச வேண்டும். இவ்வாறு டி ஆர் பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications