லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொலை- சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: உ.பி. மாநிலாம் லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இரு வழக்கறிஞர்கள் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்துக்குள் காரை ஏற்றியதால் 3 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நடந்த வன்முறை நிகழ்வுகளில் மேலும் 6 பேர் பலியாகினர். லக்கிம்பூர் வன்முறை சம்பவமானது 9 பேரை பலி கொண்டது. இந்த சம்பவம் நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

உ.பி.போலீஸ் கைது செய்யவில்லை
லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிரா மீது உ.பி. மாநில போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அஜிஸ் மிஸ்ராவும் ஆஷிஸ் மிஸ்ராவும் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை என திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். இந்த படுகொலைகள் தொடர்பாக இதுவரை யாரும் கைதும் செய்யப்படவில்லை.

சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு
இந்நிலையில் லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இரு வழக்கறிஞர்கள் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில்தான் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மற்றும் போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் இரு வழக்கறிஞர்களும் தங்களது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்
இதனிடையே லக்கிம்பூர் படுகொலை சம்பவங்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை தடுத்து வைப்பதற்கும் உ.பி. பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். உச்சநீதிமன்றம் சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்பது அரசியல் கட்சியினரின் கோரிக்கை.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி
டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம்தான் உ.பி.க்கும் பரவியது. டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிறுத்தி வைத்துவிட்டது. இதன்பின்னர் யாரை எதிர்த்து எதற்காக போராட்டம் நடத்தப்படுகிறது? என்று கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் லக்கிம்பூர் படுகொலை சம்பவங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications