எப்படி பேசனும்னு பிரியங்காவிடம் இருந்து கற்றுக்கோங்க.. ராகுல் காந்திக்கு அட்வைஸ் கொடுத்த அமித்ஷா
டெல்லி: நயமாக பேசும் கலையை தனது சீனியர்கள், சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கூறினார். லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும், தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது, இந்த கருத்தை அமித்ஷா கூறினார்.
அமித்ஷா கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவரின் (ராகுல்காந்தி) உரையை நான் கேட்டேன். இந்த அவையின் கண்ணியத்தை இந்திய அளவிலும் தேச அளவிலும் நிலைநிறுத்துவது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அந்த கண்ணியத்தை இழிவு செய்யும் விதமாக உள்ளது. நீங்கள் கோழை, நீங்கள் சரண் அடைந்துவிட்டீர்கள், நீங்கள் பயந்து விட்டீர்கள் என்று பேசுவதெல்லாம் என்ன மாதிரியான வார்த்தை.

அவையின் எதிர்க்கட்சி தலைவர் இப்படித்தான் நடந்து கொள்வதா? நாடு இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருக்கிறது. உங்கள் கட்சியை மக்கள் மதிப்பிடுவார்கள். இந்த வார்த்தைகள் வெறும் உணர்வுகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவையில் எப்படி பேசவேண்டும் என்ற கலையை இந்த அவையில் உள்ள உங்கள் சீனியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
சீனியர்கள் யாரும் இல்லையென்றால், பிரியங்கா காந்தியும் சீனியர்தான். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்றார். முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பிரியங்கா காந்தியின் பேச்சால் அமித்ஷா அவையில் குலுங்கி குலுங்கி சிரித்தார். பிரியங்கா காந்தி பேசும் போது, "நீங்கள் (அமித்ஷா) எல்லாரும் பிளான் பண்ணித்தான் வந்திருக்கிறீர்கள்.
இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே ஷாக் ஆகியிருப்பார். தற்போது அமித்ஷா சிரிக்கிறார். நான் சொன்னதை ஒப்புக்கொள்கிறார்" என்று கூறினார். முன்னதாக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் உரையை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். ராகுல் காந்தி பேசுகையில், நான் இருபது ஆண்டுகளில் செய்ய முடியாததை 5 நிமிடத்தில் பிரியங்கா காந்தி செய்துவிட்டார் என்றார். இதனைக்கேட்ட அமித்ஷா அப்போதும் லேசாக சிரித்தார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் இந்த மசோதா நிறைவேற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் ஆகும். இதில் 489 வாக்குகள் பதிவாகின. இதில் 278 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 வாக்குகள் எதிராகவும் பதிவாகி இருந்தன. பின்னர் இது மறுஆய்வு செய்யப்பட்டது.
அப்போது 528 வாக்குகள் பதிவாகின. இதில் 298 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 வாக்குகள் எதிராகவும் இருந்தன. பதிவான 528 வாக்குகளில் 3-ல் 2 பங்கு என்பது 352 ஆகும். ஆனால் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளே பதிவாகி இருந்தன. 54 வாக்குகள் குறைவாக இருந்தன. இதனால் மத்திய அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications