அஹில்யா தேவியான அகமது நகர்.. அலஹாபாத் டூ பெரோஸ் ஷா கோட்லா வரை! மாற்றப்படும் பெயர்கள் - லிஸ்டு இதோ
டெல்லி: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தின் பெயரை அம்மாநில முதலமைச்சர் மாற்றுவதாக அறிவித்து உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு, மாநில பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகள் மாற்றிய பகுதிகளின் பெயர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முகலாயர் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்கள் இன்றளவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்திலும், அதன் பின் நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளாக இந்த பெயர்களை யாரும் மாற்றவில்லை.

ஆனால், கடந்த 5 ஆண்டுகள் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் பெயர்களும், பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள பகுதிகளின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதிகளவில் டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்த முகலாயர் கால வரலாற்றை தாங்கி நிற்கக்கூடிய பழமையான நகரங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்து இருக்கும் "முகல் தோட்டம்" என்ற பெயர் "அம்ரித் உத்யான்" என்று மாற்றம் செய்யப்பட்டது.
அதேபோன்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் அமைந்து இருக்கும் "முகல் தோட்டம்" பெயர் கௌதம புத்தா தோட்டம் என மாற்றப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமான "அலகாபாத்தின்" பெயரை "பிரயாக்ராஜ்" என்று மாற்றினார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் "பைசாபாத்" மாவட்டத்தின் பெயரை யோகி ஆதித்யநாத் "அயோத்யா" என்று மாற்றம் செய்தார். டெல்லியில் உள்ள உலக புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான "ஃபெரோஸ் ஷா கோட்லா"வின் பெயரை மாற்றி மறைந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர "அருண் ஜெட்லி"யின் பெயர் வைக்கப்பட்டது.
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் "முகல் சராய்" என்ற ரயில் நிலையத்தின் பெயரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரின் பெயரான "பண்டிட் தீன் தயாள் உபாத்யாய" ரயில் நிலையம் என பெயர் மற்றம் செய்யப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டுமே நடந்துகொண்டிருந்த இந்த பெயர் மாற்றத்தை மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தி உள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.
ஆம், அம்மாநிலத்தின் "அகமது நகர்" என்ற பெயர் கொண்ட மாவட்டத்தை அஹில்யா தேவி ஹோல்கர் என மாற்றம் செய்யப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார். இது அல்லாமல் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications