வெடித்து சிதறிய காருக்கு அருகே.. துப்பாக்கி தோட்டா! யாருடைய வேலை இது? விசாரணை தீவிரம்
டெல்லி: இன்று இரவு சுமார் 7 மணி அளவில், டெல்லி செங்கோட்டை அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்தது. இது கார் வெடிப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
செங்கோட்டை மெட்ரோ நிலையம் கேட் எண் 1 அருகே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியதாக டெல்லி போலீஸ் கூறியிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டவுடன் அமித்ஷா உடனடியாக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் ஆறுதல் தெரிவிதிருக்கிறார். அதேபோல, குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக சம்பவ இடத்தில் டெல்லி போலீசார், தடயவியல் துறை நிபுணர்கள், என்ஐஏ அதிகாரிகள் மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வின்போது துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா, "செங்கோட்டை சிக்னல் அருகே மெதுவாகச் சென்று கொண்டிருந்த வாகனத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாகனத்திற்குள் பயணிகள் இருந்தனர்" என்று கூறுகையுள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பழைய டெல்லியின் நெரிசலான பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். நிலைமை குறித்த தகவல்களை அமித்ஷா பிரதமரிடம் விளக்கினார்.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி-NCR பகுதி, உத்தரப்பிரதேசம், மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உடல்கள் சிதறி இருப்பதும், கார்கள் நொறுங்கி இருப்பதும் சம்பவம் தொடர்பான வெளியான வீடியோக்களில் பார்க்க முடிகிறது. தீயணைப்பு துறை அதிகாரி ஏ.கே. மாலிக் சம்பவம் குறித்து கூறுகையில், "நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றோம். 7 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இரவு 7:29 மணிக்கு தீ அணைக்கப்பட்டது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications