ஜூன் 4 க்ளைமாக்ஸ்- மத்தியில் பாஜக ஆட்சி தொடருமா? ”அந்த” 4 மாநிலங்கள்.. தீர்மானிக்கும் 150 தொகுதிகள்?
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தல் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தொடருமா? இல்லையா? என்பதை 4 மாநிலங்களின் 150 தொகுதிகள்தான் தீர்மானிக்கப் போகின்றன என்பதுதான் கள நிலவரம்.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்தியில் மீண்டும் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் இருக்கிறது பாஜக. ஆனால் "இந்தியா" கூட்டணியோ புதிய ஆட்சி எங்களுடையது என்கிறது. லோக்சபா தேர்தல் கள நிலவரங்களில் முக்கிய பங்கு வகிப்பவை 282 தொகுதிகள். அதாவது தென்னிந்தியாவின் 132 தொகுதிகளும் மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ஒடிஷாவின் 150 தொகுதிகளும்தான் என்பது யதார்த்தம்.
தென்னிந்தியா: தென்னிந்தியாவின் 132 தொகுதிகளில் பாஜகவால் கர்நாடகாவில்தான் அதிகபட்சமாக டபுள் டிஜிட் இடங்களைப் பெற முடியும். தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவால் மிக அதிகபட்சம் 20 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்.
பீகார்: சரி இதர 4 மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? 2019-ம் ஆண்டு பீகாரில் மொத்தம் 40 தொகுதிகளில் பாஜக 39 இடங்களில் வென்றது. மொத்த வாக்கு சதவீதம் 54%. தற்போது பாஜகவால் நிச்சயம் இத்தனை இடங்களைக் கைப்பற்றவே முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கு மிக முக்கிய காரணம் ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார்தான். பாஜகவுடன் கூட்டணியை முறித்து ஆர்ஜேடி காங்கிரஸுடன் ஆட்சியை அமைத்து பின்னர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவியதில் நிதிஷ்குமார் மீதும் அவரது ஆட்சி மீதும் கடும் அதிருப்தி இருக்கிறது என்பது முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு 39 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லையாம்.
மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும்தான் நேரடி மோதல். 2019-ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வென்றது; திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைக் கைப்பற்றியது. தற்போதைய தேர்தலில் 30-க்கும் அதிகமான இடங்களைப் பெறுவோம் என்கிறது பாஜக. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் இடத்தை கெட்டியாகப் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிராமப்புறங்கள் வரை ஆழ கால்பதித்திருக்கிறது. இதனால்தான் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் இருந்து வருகிறது. என்னதான் இடதுசாரிகளின் வாக்கு சதவீதத்தை தம் வசமாக்கியிருந்தாலும் பாஜகவால் திரிணாமுல் காங்கிரஸை விட அதிக இடங்களை ஒருபோதும் பெற்றுவிட முடியாது எனவும் கூறப்படுகிறது.
ஒடிஷா: ஒடிஷாவின் கள நிலவரமும் அப்படித்தான். ஒடிஷாவில் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பிஜூ ஜனதா தளம் கட்சியுடன் மோதுகிறது பாஜக. ஒடிஷாவில் காங்கிரஸ் இருப்பை பாஜக கபளீகரம் செய்திருக்கிறது உண்மைதான். ஆனால் பாஜகவால் பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்திவிட முடியுமா? என்பது பெரும் கேள்விக்குறி என்கின்றனர். 2019 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 12; பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றது. இப்போதும் பிஜூ ஜனதா தளம் எந்த கட்சியாலும் எத்தனை விமர்சனங்களாலும் அசைக்க முடியாத நிலைமைதான். இன்னும் சொல்லப் போனால், பாஜக விமர்சித்து வரும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை விவகாரம், அவருக்கு அனுதாபத்தை தேடித்தான் தருமே பாஜகவுக்கு ஓட்டாக திரும்பாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பாஜகவின் வெற்றி இமாலய வெற்றியாக இருக்காது. ஏனெனில் பாஜக களத்தில் இறங்கி இருப்பதே சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறவர்களால்தான். 2019 தேர்தலில் பாஜகவுடன் கை கோர்த்து நின்றது சிவசேனா. இன்றைக்கு அதே சிவசேனாவையே ஒழித்துக் கட்ட உடைத்துவிட்டது பாஜக. இந்த கோபம், பாஜகவை நேசித்த சிவசேனா தொண்டர்களிடம் உக்கிரமாக இருக்கிறது. சிவசேனாவின் தயவில் 48 இடங்களில் 23 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இப்போது அத்தனை தொகுதிகளில் வெல்வதை கனவிலும் நினைக்க முடியாது என்பதே களம் சொல்லும் செய்தி என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். இந்த 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகம் இல்லாமல் போனால் பாஜகவின் ஆட்சி தொடரும் என்ற கனவும் கூட கேள்விக்குறியே என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications