தேர்தல் திருவிழாவில் திடுதிப்பென காணாமல் போன "இந்தியா" கூட்டணி இனி உயிர்த்தெழும்? காங். வியூகம் இது?
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் திருவிழாவில் திடீரென "இந்தியா" கூட்டணி என்பது காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தலிலும் "இந்தியா" கூட்டணி கட்சிகளே குடும்பிடி சண்டை போட்டு மல்லுக்கட்டின. இப்போது 5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில் இனியாவது "இந்தியா" கூட்டணி வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படுமா? என்பது அரசியல் களத்தின் எதிர்பார்ப்பு.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவின் கண்ணுக்கு முன்னே எதிரிகளே இல்லை என்கிற நிலைமைதான் இருந்து வந்தது. ஏனெனில் நாட்டில் இருக்கிற அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் திரும்பிக் கொண்டு நின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் எதிரும் புதிருமாக அரசியல் செய்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் அல்லது சங்கமம் என்பது சாத்தியமற்றதாக இருந்தன.

உதயமானது "இந்தியா" கூட்டணி: நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜி என பலரும் முயற்சித்தாலும் எதுவுமே உருப்படியான உருவெடுக்கவில்லை. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஒருவழியாக ஒருங்கிணைத்தனர். பாட்னா, பெங்களூர், மும்பையில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கின.
பாஜக பதற்றம்: இதுவரை எதிரிகளே இல்லை என அசால்ட்டாக இருந்த பாஜக ரொம்பவே ஆடித்தான் போனது "இந்தியா" கூட்டணியின் பாய்ச்சலில். இதனால் திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டியது. "இந்தியா" என்ற பெயரையே உச்சரிக்காமல் "பாரத்" என்ற பெயரை கையில் எடுத்தது. இதன் உச்சமாக நாட்டின் பெயரையே "பாரத்" என மாற்றப் போவதாக சொன்னார்கள். "இந்தியா" என்ற பெயரை பயங்கரவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியே பேசினார். இவை அத்தனையும் "இந்தியா" கூட்டணி குறித்த பாஜகவின் அச்சத்தையே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருந்தது.
5 மாநில தேர்தல்: அத்துடன் "இந்தியா" கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கும் தயாராகிவிட்டன. இந்த நாலு கால் பாய்ச்சலுக்கு கடிவாளம் போடும் வகையில்தான் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்தது போதும்.. அன்றோடு "இந்தியா" கூட்டணிக்கே மூடு விழா நடத்தியது போல் ஆகிவிட்டது. இதனை வெளிப்படையாக "இந்தியா" கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமாரே விமர்சித்தார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் சுட்டிக்காட்டி இருந்தார். 5 மாநில தேர்தல் முடிவடைந்ததும் காங்கிரஸுக்கு "இந்தியா" கூட்டணியின் நினைப்பு வந்துவிடும் என கிண்டலடித்திருந்தார் நிதிஷ்குமார்.
காங்கிரஸ் வியூகம்: இப்போது 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த 5 மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு 'மரண பயத்தை' காட்டி ஆகப் பெரும் விஸ்வரூபத்தை காங்கிரஸ் பெறும் என்பதுதான் கள யதார்த்தம். இந்த 5 மாநில தேர்தல் விஸ்வரூபத்தை வைத்தே பல கணக்குகளைப் போட்டிருக்கிறதாம் காங்கிரஸ். இதோ, 5 மாநிலங்களில் எங்க மாஸ் இதுதான்.. எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும்; நாங்கதான் பிரதமர் வேட்பாளர் என்ற பேர மிரட்டல்களுக்கு எல்லாம் 5 மாநில தேர்தல் முடிவுகள் கை கொடுக்கும் என்பது காங்கிரஸின் கணக்காம். பார்ப்போம் இனியாவது "இந்தியா" கூட்டணி ஆட்டத்தை தொடங்குமா என!












Click it and Unblock the Notifications