பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதியில் 87,000 பேர்தான் வாக்காளர்களாம்- உங்களுக்கு தெரிந்துவிட்டதா?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லையாம். வெறும் 87,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட ஒரு தொகுதியைத்தான் பிரியங்கா காந்தி தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள்தான் நேரு-இந்திரா குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள். நேருவின் மருமகனும் இந்திராவின் கணவருமாகிய ஃபெரோஸ் காந்தி, இந்திரா மகன்கள் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, இந்திராவின் மருமகள் சோனியா காந்தி, இந்திராவின் பேரன் ராகுல் காந்தி என ஒட்டுமொத்த குடும்பமும் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றுள்ளனர். 2019-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போதைய லோக்சபா தேர்தலில் மீண்டும் அமேதியில் ராகுல் காந்தி பொட்டியிடுவார் என கூறப்பட்டு வருகிறது. சோனியா காந்தி, மீண்டும் ரேபரேலியில் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிவிட்டார்.
இதனால் சோனியாவின் ரேபரேலி தொகுதியில்தான் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக ஒரு தொகுதியின் பெயர் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டாமன் டையூ யூனியன் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேதன் பட்டேல் கூறுகையில், டாமன் டையூ லோக்சபா தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது. காங்கிரஸ் மேலிடம் இது தொடர்பாக ஆலோசனைகளையும் விவரங்களையும் கேட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த யோசனையை வரவேற்கிறோம். பிரியங்கா காந்தி டாமன் டையூ லோக்சபா தொகுதியில் போட்டியிட்டால் தெற்கு குஜராத், சவுராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வலிமையடையும். இந்த பகுதிகள்தான் காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கி உள்ளவை. ஆகையால் காங்கிரஸ் மேலிடத்தை வரவேற்கிறோம் என்றார்.
1987-ம் ஆண்டு முதல் டாமன் டையூ லோக்சபா தொகுதி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும் பாஜக 6 முறையும் வென்றுள்ளது. டாமன் டையூ லோக்சபா தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 87,000 பேர்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் லாலுபாய் பட்டேல் 37,597 (42.98%) வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளராக கேதன் பட்டேல் 27,655 (31.62%) வாக்குகளைப் பெற்றிருந்தார். 2009-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக இங்கு பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. 2009-ல் பாஜக வேட்பாளர் லாலுபாய் பட்டேல் 65.48% வாக்குகளைப் பெற்றிருந்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் 28.97% வாக்குகளையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications