வெற்றி எங்களுக்குத்தான்.. 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்து.. கொண்டாட காத்திருக்கும் காங்கிரஸ்
போபால்: பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு தேர்தல்களை போல அல்லாமல், இம்முறை டபுள் டிஜிட்டில் வெல்லும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பட்வாரி கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றியை கொண்டாட காங்கிரஸ் கட்சி 100 கிலோ லட்டுவிற்கும் ஆர்டர் கொடுத்துள்ளதாம்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

அதேவேளையில், பாஜகவை விழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன. இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்றே கூறுகின்றன. அதிலும் இந்தியா டுடே உள்ளிட்ட 3 செய்தி நிறுவனங்கள் பாஜகவிற்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளன.
எக்சிட் போல் கணிப்புகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன. ஆனாலும் கருத்துக் கணிப்புகள் தவறாக அமையும் என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் தலைமை, வெற்றி கொண்டாட்டத்திற்காக 100 கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாம். கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
ஆனால், இந்த முறை வெற்றி பெறுவது உறுதி என காங்கிரஸ் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். அதாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்து வைத்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாக்கு எண்ணிக்கை தினத்திலும் உஷாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை கட்சி முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம். அதேவேளையில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜகவிற்கு சாதகமாகவே களம் உள்ளதை காட்டுகின்றன. இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சி 28 லிருந்து 29 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications