இன்று மாலை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதாவது, ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 7 கட்டமாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. இன்று கடைசி மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. வருகிற 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இதோடு 3 வது முறையாக தொடர்ந்து வெற்றியை பறிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி கடந்த 3 மாதமாக பிரசாரம் செய்த மோடியும் கூட இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்.
இதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இன்றுடன் லோக்சபா தேர்தல் முடியும் நிலையில், நேற்று முன்தினமே பிரசாரம் முழுவதுமாக ஓய்ந்துவிட்டது. 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இன்று மாலை லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications