5-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. ரொம்பவே மோசம்.. இரவு 11.30 மணி வரை வெறும் 60.09% வாக்குகள் பதிவு!
டெல்லி: 5-வது கட்ட லோக்சபா தேர்தலில் நேற்று (மே 20) இரவு 11.30 மணி வரை மொத்தம் 60.09% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. 5-வது கட்ட தேர்தல் நேற்று 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு 94,732 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 5-ம் கட்ட தேர்தலில் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இடம் பெற்றிருந்தனர்.
5-வது கட்ட தேர்தல் நேற்று பொதுவாக அமைதியாக நடைபெற்றாலும் மேற்கு வங்க மாநிலத்தில் பல இடங்களில் பெரும் வன்முறைகள் வெடித்திருந்தன. இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் 5-வது கட்ட லோக்சபா தேர்தலில் நேற்று இரவு 11.30 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் மொத்தமே 60.09% வாக்குகள்தான் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக 5-வது கட்ட தேர்தல் வாக்குப் பதிவு:
பீகார் 54.85%
ஜம்மு காஷ்மீர் 56.73%
ஜார்க்கண்ட் 63.07%
லடாக் 69.62%
மகாராஷ்டிரா 54.29%
ஒடிஷா 67.59%
உ.பி. 57.79%
மேற்கு வங்கம் 74.65%
இருப்பினும் தற்போதைய நிலவரப்படி இந்த வாக்கு பதிவு சதவீதம் மாறக் கூடியதுதான் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தலின் 4 கட்டங்களில் மொத்தம் 66.95% வாக்குகள் பதிவாகி இருந்தன. 4 கட்டங்களில் மொத்தம் 45.10 கோடி பேர் வாக்களித்திருந்தனர்.
முதல் கட்டத் தேர்தலில் 66.14 சதவீதமும் 2-வது கட்டத் தேர்தலில் 66.71 சதவீதமும் 3-வது கட்ட தேர்தலில் 64.4% வாக்குகளும் 4-வது கட்டத் தேர்தலில் 67.25 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications