விலைவாசி உயர்வு.. விவாதத்திற்கு ஓகே! அவையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. இறங்கி வரும் மத்திய அரசு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த இரு வாரங்களாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முறையாக நடைபெறவில்லை. இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நாடாளுமன்றத்திலும் பதாகைகளை எடுத்து வந்து முழக்கங்களை எழுப்பி வந்தனர். அவையைச் செயல்பட விடாமல் முடக்கியதாக 4 காங்கிரஸ் எம்பிக்கள் மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவைகள் முடக்கம்
இருந்த போதிலும் எதிர்க்கட்சியினர் இதை விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தனர். அவையை முடக்கியதாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மேலும் 19 பேர் வாரம் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினர் செயல்பட்டால் தொடர்ச்சியாக இரு வாரங்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே முடக்கப்பட்டன.

விளக்கம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியதும் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் மக்களவையில் தெரிவித்திருந்தார். நிர்மலா சீதாராமன் அவைக்குத் திரும்பியதும் உடனடியாக விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றே அவர் கூறி இருந்தார்.

இறங்கி வரும் மத்திய அரசு
தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனாவில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவரை "ராஷ்டிரபத்னி" என்று காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குறிப்பிட்டது தொடர்பாகக் கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து இருந்தார். இதனால் விரைவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியானது.

எப்போது
இந்தச் சூழலில் வரும் திங்கள்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மக்களவையிலும், அதன் பின்னர் மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த விவாதத்திற்குப் பின்னர், அவை சுமுகமாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications