ஹை டென்சன்.. மோடியின் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர்
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு உள்ளார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வியாழன் அன்று நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், அதற்கு முதல் நாள் வெளியான மணிப்பூர் பெண்களின் நிர்வாண ஊர்வல வீடியோ நாட்டையே உலுக்கி 5 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்க காரணமாகி உள்ளது.

இது தொடர்பாக கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மணிப்பூரில் நடந்த சம்பவம் வெட்கக்கேடான ஒன்று. இதனால் எனது இதயம் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என நான் உறுதி அளிக்கிறேன். சட்டம் தனது கடமையை முழு வலிமையுடன் செய்யும். மணிப்பூருடைய மகள்களுக்கு நடந்த இந்த சம்பவம் மன்னிக்க முடியாதது." என்று கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி மக்களவைக்கு உள்ளே மணிப்பூர் பற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத் தொடரின் முதல் நாளே நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையும் அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின.

வார விடுமுறை முடிந்து திங்கள்கிழமை மீண்டும் அவை கூடியபோதும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற காந்தி சிலை முன்பாக மணிப்பூர் விவகாரம் குறித்து மோடி பேச வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் தொடர்பாக தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக் சபாவில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இது பற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ரஜானி பாட்டில் ஆகியோர் இதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி துமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இதற்கு ஆதரவளித்து உள்ளன. இது தொடர்பாக எப்போது விவாதிப்பது என்று சபாநாயகரே முடிவு செய்வார். 10 மணிக்கு முன் நோட்டீஸ் அளித்தால் அது அன்றைய தினமே விவாதிக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதாகவும், ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்றைய கூட்டத்தில் பங்கேற்காததால் இன்று விவாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications