திசைக்கு ஒரு பக்கம் சிதறல்- பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
டெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் 23-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மொத்தம் 16 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 13,14-ந் தேதிகளில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இப்பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் ஜூலை 13,14-ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications