சிம்லாவுக்கு பதில் ஜெய்ப்பூர்? ஜூலை 14-ல் அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம்!
டெல்லி: பாஜக அல்லாத காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 14-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டம் சிம்லாவுக்கு பதில் ஜெய்ப்பூரில் நடைபெறும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸை உள்ளடக்கிய இந்த எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இடதுசாரி கட்சிகளின் சீதாராம் யெச்சூரி, டி ராஜா உள்ளிட்ட 16 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பொது வேட்பாளர்களை நிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இதனால் மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி நீடிக்குமா? என்பது கேள்விக்குறி. மேலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சி இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்துவது என முடிவு செய்துள்ளனராம். ஜூலை 14-ந் தேதி ஜெய்ப்பூரில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications