லோக்சபா தேர்தலில் பாஜக சீனியர் ராஜ்யசபா எம்பிக்கள்- தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் போட்டி?
டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் சீனியர் ராஜ்யசபா எம்பிக்கள் பிளஸ் மத்திய அமைச்சர்களாக இருக்கும் பலரும் போட்டியிட தயாராகி வருகின்றனராம்; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார் என்கின்றன சில ஊடக செய்திகள்.
பாஜகவில் மிகவும் சீனியர்களாக இருந்து அரசியலில் தொடருவது என்பது தலைக்கு மேலே தொங்குகிற கத்தியைப் போலதான். பாஜக எனும் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான அத்வானியே ,அக்கட்சியின் முதியோர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டுவிட்டார். அதேபோல 2 முறை, 3 முறை ராஜ்யசபா எம்.பிக்களாக இருப்பவர்கள் மற்றும் ராஜ்யசபா எம்பியாக இருந்து கொண்டு மத்திய அமைச்சர்களாக இருப்பவர்களை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் மொத்தம் பாஜகவின் 18 ராஜ்யசபா எம்.பிக்கள் இடம்பெறுகின்றனராம். 2 முறை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் மாஜி மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. அவருக்கு 3-வது முறை வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தர்மேந்திர பிரதான்: தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான், 2012-ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியானார். 2018-ம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆகையால் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகும் முயற்சியில் உள்ளாராம் தர்மேந்திர பிரதான். ஒடிஷா மாநிலம் தென்கானல் லோக்சபா தொகுதியில் தர்மேந்திர பிரதான் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பூபேந்திர யாதவ்: 2 முறை ராஜ்யசபா எம்பியானவர் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ். அவரது பதவி காலமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனையடுத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம் பூபேந்திர யாதவ். ராஜஸ்தான் அல்லது ஹரியானா மாநிலத்தில் பூபேந்திர யாதவ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
மன்சுக் மாண்டவியா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் 2 முறை ராஜ்யசபா எம்பியானவர். அவரது பதவி காலமும் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடைகிறது. ஆகையால் குஜராத் மாநிலம் பாவ்நகர் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம் மாண்டவியா. அப்படி பாவ்நகர் தொகுதி கிடைக்காமல் போனால் போர்பந்தர் தொகுதியையும் லிஸ்ட்டில் வைத்துள்ளாராம்.
நிர்மலா சீதாராமன்: 2014-ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். அவரது பதவி காலம் 2016-ல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2016-ல் மீண்டும் ராஜ்யசபா எம்பியானார். 2022-ல் 3வது முறையாகவும் ராஜ்யசபா எம்பி பதவி அவருக்கு கிடைத்தது. தற்போதைய நிலையில் 2028-ம் ஆண்டு வரை அவரது ராஜ்யசபா எம்பி பதவி காலம் இருக்கிறது. ஆனால் பாஜக மேலிடத்தின் உத்தரவுப்படி லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறாராம் நிர்மலா சீதாராமன். இதனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டப்படுகிறதாம். தென்சென்னை அல்லது திருச்சி அல்லது மதுரை, நிர்மலா சீதாராமன் தரப்பின் லிஸ்ட்டில் இருக்கிறதாம்.
மேலும் ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், பியூஷ் கோயல், நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்யா சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப்ஷிங் பூரி ஆகியோரும் லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட உள்ளனர் என்கின்றன ஊடக செய்திகள்.












Click it and Unblock the Notifications