அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததில் முதலிடத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம்
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை,
மத்திய பாஜக அரசு அறிவித்தது. அதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ அது தொடர்பான தகவல்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எஸ்பிஐ 4 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள், அவற்றை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களை கடந்த 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ அளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தின் போது பல கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்.
இத்தனைக்கும் அந்த நேரத்தில்தான் லாட்டரி மார்ட்டின் அமலாகக்த்துறை விசாரணை வளையத்தில் இருந்தார். பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் ரூ. 1,368 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு கட்டமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதேபோல், மேகா என்ஜினீரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டட் நிறுவனம் ரூ.980 கோடி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications