பயங்கரவாதிகள் நாசவேலை? டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடிப்பு! களத்தில் இறங்கிய என்ஐஏ
டெல்லி: டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாதிகளின் நாச வேலையா என்ற கோணத்தில் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
நமது நாட்டில் பல்வேறு துணை ராணுவப் படைகள் உள்ள நிலையில், அதில் முக்கியமானது சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF). உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிப்பதே இந்த படையின் முக்கிய பொறுப்பாகும்.

மேலும், நமது நாட்டில் உள்ள மிகப் பழமையான துணை ராணுவப் படை இதுவாகும். இந்த ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் படிக்க டெல்லி ரோகினி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
மர்மப் பொருள் வெடிப்பு: டெல்லி ரோகினி அருகே உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பள்ளி அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு மிக அருகே பயங்கர வெடிப்பு சத்தம் கேட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை சூழ்ந்துள்ளது. பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு மிக அருகில் இது நடந்துள்ளது.

பள்ளியின் அருகே இருந்த அனைவராலும் இந்த சத்தத்தை தெளிவாக கேட்க முடிந்துள்ளது. அந்தளவுக்கு வலிமையான சத்தமாக இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பள்ளியின் சுவருக்கு மிக அருகே இந்த மர்மப் பொருள் வெடித்த நிலையில், அருகே இருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், பள்ளி சுவர் அருகே வெள்ளை நிற தூள் போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்கள் சொல்வது என்ன: இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "நான் இன்று காலை வீட்டில் இருந்தேன். அப்போது தான் இந்த பலத்த சத்தம் கேட்டது.. வெளியே வந்து பார்த்த போது வெள்ளை கலரில் புகை சூழ்ந்து இருந்தது. எதுவுமே தெரியவில்லை. போலீஸ் குழுவும் ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர்" என்றார்.

வழக்கமாக இந்த பள்ளியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. இதன் காரணமாகவே நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை எதனால் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
நாசவேலை: மர்ம பொருள் வெடிப்பு குறித்த அறிய அங்கு வெடி தடுப்பு படை மற்றும் போலீஸ் தடயவியல் குழு அப்பகுதிக்குச் சென்றது. தேசிய புலனாய்வுத் துறையினர், டெல்லி காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் இப்போது தேசிய பாதுகாப்பு படையினரும் அதிநவீன உபகரணங்களுடன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய்கள் உதவியுடன் ஒரு இடம் கூட விடாமல் தீவிரமாகத் தடயங்களைத் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சேகரித்து வருகிறார்கள். இது பயங்கரவாதிகளின் நாச வேலையா என்ற கோணத்திலும் இப்போது விசாரணை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications