17C- வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவை வெளியிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: வாக்குச் சாவடிகள் வாரியாக வாக்குப் பதிவை உள்ளடக்கிய 17 சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கோரிய பொதுநலன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் இதில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் வாக்குச் சாவடிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரத்தை வெளியிட வேண்டும்; வாக்குச் சாவடிகளில் பூத் ஏஜெண்டுகளிடம் தரப்படும் 17 சி படிவத்தை உள்ளடக்கியதாக இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலன் வழக்கு. உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
உச்சநீதிமன்ற்த்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், வாக்குப் பதிவுகள் தொடர்பான 17 சி படிவத்தைப் பற்றிய புரிதல் இல்லாத நிலையில் பொதுமக்களிடையே வாக்குப் பதிவு தொடர்பான குழப்பம் ஏற்படும். முதல் முறையாக வாக்குப் பதிவு எண்ணிக்கை வெளியிடப்படும்; அடுத்ததாக 17 சி படிவத்துடன் வெளியிடும் போது தபால் வாக்கு எண்ணிக்கையும் சேரும். இந்த வித்தியாசத்தை எளிதில் புரிந்து கொள்ளாத போது குழப்பம்தான் ஏற்படும்.
தேர்தல் ஆணையத்தின் மீது வஞ்சகம் கொண்டவர்கள் அவதூறை பரப்ப இது வழிவகுக்கும். 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டால் சிக்கல்கள் எழும். அதே 17 சி படிவத்தை போலியாகவும் உருவாக்கி குழப்பத்தை உருவாக்கலாம். இது தேர்தல் ஆணையம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, தற்போது லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்குப் பதிவு விவரங்களில் தலையிட விரும்பவில்லை. ஆகையால் மனுதாரரின் மனுவை தற்போது விசாரிக்க இயலாது என கூறி ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications