கர்நாடகா நியாபகம் இருக்கா? மறக்க வேண்டாம்.. நீதிமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக சிங்வி கடும் வாதம்!
டெல்லி: கர்நாடகா அரசியலில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் நடந்ததை மறக்க வேண்டாம் என்று இன்று சிவசேனா - காங். - என்சிபி தொடர்ந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் பதில் அளிக்கும்படி முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இந்த மனு மீதான அவசர விசாரணையில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இதில் சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்கள்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை.. பட்னாவிஸ், அஜித் பவாருக்கு நோட்டீஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
என்ன வாதம்
என்சிபி - காங்கிரஸ் - சிவசேனா சார்பாக ஆஜரான இன்னொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் வைத்தார். அவர் தனது வாதத்தில், இன்னும் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆளுநர் எந்த விதமான விதியையும் பின்பற்றவில்லை. மத்திய அரசின் அழுத்தத்தால் அவர் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்.
ஆளுநரின் செயல்
ஆளுநரின் இந்த செயல் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும். இதில் முடிவு கொண்டு வர வேண்டுமெனில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பதவி ஏற்பிற்கு முன்பே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். கர்நாடகாவில், ஜார்கண்டில் நடந்ததை மறக்க கூடாது.
உடனே வேண்டும்
உடனடியாக இடைக்கால சபாநாயகரை நியமித்து, வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மூத்த எம்எல்ஏவை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும். கர்நாடக வழக்கு தீர்ப்பை சிங்வி படித்து காட்டுகிறார். கர்நாடகாவில் வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இன்றே வேண்டும்
இன்றோ, நாளையோ வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 41 என்சிபி எம்எல்ஏக்கள் சிவசேனாவிற்கு ஆதரவு தருகிறார்கள். இதற்கான கடிதம் சிவசேனா கூட்டணியிடம் இருக்கிறது. பாஜக - அஜித் பவார் கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. அரசு என்பது பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும், என்று குறிப்பிட்டார்.