டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு.. மாணவர்களை மிரட்டும் யுத்தியா?
டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்தார்.
அவர் திடீரென வானத்தை நோக்கியும் மாணவர்களை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். இதனால் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாணவர்களிடம் கேட்ட போது அந்த நபர் எங்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளார். அவர் உள்ளே நுழைந்ததும் டெல்லி போலீஸாருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார் என்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த நபரின் பெயர் ராம் பகத் கோபால் (31) என்றும் அவர் ஜேவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் நாட்டுத் துப்பாக்கியுடன் போராட்டக்களத்திற்கு வந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த மாணவர்களிடம் மறியல் செய்யப்படுவதை கைவிட வேண்டும் என்றும் சாலை போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
காயமடைந்த மாணவர் ஜம்மு காஷ்மீரின் தோடாவை சேர்ந்த ஷாதாப். இவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷனில் முதலாம் ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆவார். துப்பாக்கியால் சுட்ட கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
டெல்லி ஷாகீன்பாக்கில் பெண்கள் மட்டுமே சுமார் 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் போராட்டத்தில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்த நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் நாட்டுத் துப்பாக்கி மிகவும் எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.