முக்கால் கிலோ முதலை தலை.. ஏர்போர்ட்டையே அலறவிட்ட பலே குருவி!
டெல்லி: கனடா நாட்டை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், தனது சொந்த நாட்டுக்கு செல்ல டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அவரது பையை சோதனையிட்ட அதிகாரிகள் அவரிடமிருந்து முக்கால் கிலோ எடை கொண்ட முதலை தலையை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை முதலைகள் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினங்களாகும். எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கனடா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் சட்டவிரோதமாக தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்த பல வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தொழிலை செய்பவர்கள் குருவிகள் என்று அழைக்கப்படுகின்றனர். தங்கம் மட்டுமல்லாது அரிய வகை ஆமைகள், பாம்புகள், ஓணான்கள் ஆகியவற்றையும் இவர்கள் கடத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இதனை மோப்பம் பிடித்துவிடும் சுங்கத்துறை அதிகாரிகள் குருவிகளை கூண்டில் அடைத்து வருகின்றனர்.
இந்த குருவிகள் வரிசயைில் சமீபத்தில் ஒருவர் மிக பிரபலமாகியுள்ளார். கனடா நாட்டை சேர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக டெல்லியிலிருந்து விமானம் புக் செய்திருக்கிறார். நேற்று விமான நிலையம் வந்த அவர் தனது பொட்டி, படுக்கைகளை சோதனைக்காக வைத்திருக்கிறார். சோதனையில் சுங்க துறை அதிகாரிகள் முதலையின் தலையை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். முதலை உயிருடன்தான் இருக்கிறதோ? என்று சில நிமிடங்கள் பயந்துவிட்டனர்.
இதனையடுத்து அதை எடுத்து வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது. அதாவது, அந்த நபர் முதலையை தான் கொல்வில்லை என்று கூறியிருக்கிறார். தாய்லாந்திலிருந்து முதலை தலையை வாங்கி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆய்வில் குட்டி முதலையின் தலை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தலையை வனத்துறை அதிகாரிகளிடம் சுங்க துறையினர் ஒப்படைத்திருக்கின்றனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கனடா நாட்டவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து, சுங்க அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் விசாரித்ததில் இந்தியாவில் அவர் எந்த முதலையையும் கொல்லவில்லை என்று கூறியிருக்கிறார். தாய்லாந்திலிருந்து வாங்கி வந்ததாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கான எந்த உரிய ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை. எனவேதான் அவரை கைது செய்திருக்கிறோம். முதலை தலை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஏனெனில் தாய்லாந்து முதலைக்கும் இந்திய முதலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன" என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் முதலைகளை வேட்டையாடுவது என்பது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. பல வகை முதலைகள் இந்தியாவில் இருந்தாலும், அவற்றின் தோலுக்காகவும், பற்கள் மற்றும் இறைச்சிக்காகவும் முதலைகள் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன. இதனை தடுக்கவே சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் 32 வயது கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இதேபோல டெல்லி விமான நிலையத்தில் சிக்கினார். அவர், மான் கொம்பு போன்ற சில பொருட்களை வைத்திருந்தார். தான் நேபாள் சென்றபோது உள்ளூர் மக்கள் கொடுத்த பரிசு இது என்று கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்காத அதிகாரிகள் அவரை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications