மீண்டும் மணிப்பூர்: டெல்லியில் 'குக்கிகள்' போராட்டம்! குண்டு வெடிப்பில் மாஜி எம்.எல்.ஏ. மனைவி பலி!
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் வன்முறையால் இயல்பு நிலைமை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இன மக்களால் ஒடுக்குமுறைக்குள்ளான குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி நிர்வாக அமைப்பு கோரி டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும் மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி பலியானார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் ஓராண்டுக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் வன்முறைகளை மத்திய அரசு தடுக்கவே இல்லை என்பதும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறியவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

மணிப்பூர் வன்முறைகளுக்கு மியான்மரில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்கிறது மத்திய அரசு. அதேநேரத்தில் மணிப்பூரில் பாதிக்கப்படும் குக்கி இன மக்களின் தொப்புள் கொடி உறவுகளான மிசோரம் மாநில அரசு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. மேலும் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு என தனியான ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கை. ஆனால் குக்கி இனத்தவருக்கு தனி நிர்வாக அமைப்பை உருவாக்குவது தங்களுக்கு பாதிப்பு என்கின்றன நாகா இனக்குழுக்கள்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று குக்கி இனக்குழு மாணவர்கள், தங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை மணிப்பூர் மாநிலத்தில் உருவாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மணிப்பூரின் டெங்னெளபால் என்ற இடத்தில் இரு குழுக்களிடையே பயங்கர துப்பாக்கிச் சூடும் நடந்தது.

இதனையடுத்து காங்போக்பி மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி சாருபாலா பலியானார். மணிப்பூர் சைகுல் தொகுதியில் 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் யம்தோங் ஹெளகிப். இவர் 2022-ம் ஆண்டு காங்கிரஸை விட்டு பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மனைவி பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications