மணிப்பூர்: மோடி மவுனம்- நாடாளுமன்ற வளாகத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்பிக்கள் 'முதல்’ போராட்டம்
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளை ஒடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மணிப்பூர் வன்முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை; மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 2 சபைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பாக 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக அனைத்து எம்பிக்களும் நாளை கண்டன போராட்டம் நடத்த உள்ளனர்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலம் சென்று முகாமிட்டிருந்தார். மணிப்பூரில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு சார்பாக அமித்ஷா மேற்கொண்டிருந்தார். மேலும் அமைதி குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கு 26 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி எம்பிக்கள் சார்பாக நாளை நாடாளுமன்ற வளாகத்தில் முதல் போராட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications