வீடு எரிந்தாலும் கூட.. வன்முறை பற்றி பேசாத மணிப்பூரின் மத்திய அமைச்சர்! பதுக்கிய பாஜக? கவனிச்சீங்களா
டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக இன்றுடன் 3வது நாளாக விவாதம் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பல தலைவர்கள் பதிலளித்த நிலையில் மணிப்பூரின் ஒற்றை பாஜக எம்பியும், மத்திய இணையமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் தனது வீட்டுக்கு தீவைக்கப்பட்டாலும் கூட ஒற்றை வார்த்தை கூட பேசாமல் மவுனமாக இருந்ததாக காங்கிரஸ் சந்தேகம் கிளப்பி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது. மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறினர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் 2 பேருக்கும் ஏற்பட்ட மோதல் தான் வன்முறையானது.

இந்த வன்முறை 3 மாதங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் மத்திய இணையமைச்சரான ராஜ்குமார் ரஞ்சனின் வீட்டுக்கும் தீவைத்து எரிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 2 நாடாளுமன்ற தொகுதி உள்ள நிலையில் இன்னர் மணிப்பூர் தொகுதி எம்பியாகவும், மத்திய இணையமைச்சராகும். ராஜ்குமார் ரஞ்சன் உள்ளார்.
இந்நிலையில் தான் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் என்பது தொடங்கியது. இந்த தீர்மானத்தின் விவாதம் மீது காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு பிற கட்சி எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் பேசினர். நேற்று 2வது நாள் விவாதம் என்பது நடந்தது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி சுமார் 15 நிமிடங்கள் வரை அனல் பறக்க பேசினார். மணிப்பூர் சம்பவத்தின் மூலம் பாரத தாயை பாஜக கொலை செய்துவிட்டதாக கடுமையாக சாடினார். மேலும் அவர்களை தேச பற்றாளர்கள் இல்லை எனவும், சேதத்துரோகிகள் எனவும் விமர்சனம் செய்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதேபோல் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும் பேசினார். அதன்பிறகு நேற்று மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதையடுத்து இன்று காலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் என்பது தொடங்கி உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். மத்திய பாஜக அரசின் ஆட்சியில் பொருளாதாரம் எப்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து அவர் பேசினார். தற்போது பிரதமர் மோடியும் பதிலுரை வழங்குகிறார்.
இருப்பினும் கூட மணிப்பூர் மாநில எம்பியும், மத்திய இணையமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேசவே இல்லை. அவருக்கு பாஜக பேச வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பியாக உள்ள ராஜ்குமார் ரஞ்சனுக்கு பாஜக பேச வாய்ப்பு வழங்காமல் அவரை பதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மணிப்பூர் வன்முறையில் அவரது வீடு தீயிட்டு எரிக்கப்பட்டாலும் கூட அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை குறிப்பிட்டு தான் தற்போது காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது லோக்சபாவில் சில மத்திய அமைச்சர்கள் பேசியுள்ளனர். ஆனால் மணிப்பூரில் இருந்து தேர்வாகி உள்ள எம்பியும், மத்திய இணையமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங் தனது வீடு எரிக்கப்பட்டது ஏன்? என பேசவில்லை. மணிப்பூருக்காக நாடாளுமன்றத்தில் பேச பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லையோ?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications