மணிப்பூர்: பாஜக அரசு நீடிப்பதில் சிக்கல்! 9 பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி- டெல்லியில் மனு!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக 9 பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 9 பாஜக எம்.எல்.ஏக்களும் மாநிலத்தில் அமைதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மணிப்பூர் மாநில இன வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்முறைகளை ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேரில் சென்று முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைதிக் குழுக்களை உருவாக்கி இருந்தார். ஆனாலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மணிப்பூரில் பாஜக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே நேரத்தில் பாஜகவை சேர்ந்த மொத்தம் உள்ள 23 எம்.எல்.ஏக்களில் 9 பேர் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த 9 பேரும் மைத்தேயி இனக்குழுவை சேர்ந்தவர்கள். மாநிலத்தில் ஆளும் பாஜக அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் மத்திய ரசு தலையிட வேண்டும் என இந்த 9 பேரும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications