மீண்டும் போர்க்களமான மணிப்பூர்..முதல்வர் பைரேன் சிங் வீடு தீ வைத்து எரிப்பு- ஊரடங்கு உத்தரவு!
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2 ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது மைத்தேயி இனத்தைச் சேர்ந்த மாயமான 6 பேர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பிரளயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல்வர் பைரேன் சிங் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்ததால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே 2 ஆண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறையை அடக்குவதற்கு மத்திய அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இந்த நிலையில் மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 6 பேர் மாயமான சம்பவம் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காணாமல் போன 6 பேரும் கொல்லப்பட்டு ஆற்றில் சடலமாக வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மைத்தேயி இன மக்கள் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல்வர் பைரேன் சிங்கின் மூதாதையர் வீடு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வீடுகள் ஆகியவற்றை தாக்கியும் தீ வைத்தும் தங்களது கோபத்தை மைத்தேயி இன மக்கள் வெளிப்படுத்தினர். இதனையடுத்து மணிப்பூரில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசுதான் முடிவு கட்ட வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications