புதிய தேர்தல் ஆணையர் யார்? எப்போது நியமனம்? மார்ச் 15ம் தேதி மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக வரும் 15ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்எஸ் அதிகாரியாக அருண் கோயல், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு முடியவுள்ள நிலையில், திடீரென நேற்று தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இதற்காக அவர் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. இவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இந்த காலி இடங்களை நிரப்ப மத்திய அரசு வரும் 15ம் தேதி ஆலோசனையை நடத்துகிறது. மத்திய சட்ட அமைச்சர் மற்றும் மத்திய அரசின் 2 முதன்மை செயலாளர்கள் புதிய தேர்தல் ஆணையர்களை தேடும் பணியில் இறங்குவார்கள். இவர்கள் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளின் பின்னணி குறித்து ஆய்வை மேற்கொள்வார்கள். இப்படியாக 5 பேர் கொண்ட பட்டியலை தேர்வு குழுவுக்கு, சட்ட அமைச்சர் தலைமையிலான குழு வழங்கும்.
தேர்வு குழு என்பது 2 மத்திய அமைச்சர்கள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என 5 பேர் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பிரதமர்தான் தலைமை. இந்த குழு 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். இப்படியாக தேர்வு செய்யப்படும் நபர்தான் தேர்தல் ஆணையராகவும், தலைமை தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இதற்குள் புதிய ஆணையரை நியமிக்க முடியுமா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை புதிய ஆணையர்கள் நியமிக்கப்படும் வரை தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போகுமா? என்றும் கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கு தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ் குமாருடனான முரண்பாடுதான் காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது சில கோப்புகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் லீக்காகி வருகின்றன.
எப்படி இருப்பினும் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்னர், காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications