மேகதாது அணை - கர்நாடகாவுக்கு அனுமதி கொடுத்தீங்களா? இல்லையா? ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு வைகோ கேள்வி
டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததா? என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.கேள்வி எழுப்பினார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? என்ற வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அளித்த பதில் வருமாறு: கேள்வி எண். 585 (அ) கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு ஒன்றிய நீர் ஆணையம் அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதா?
(ஆ) இல்லையெனில், கர்நாடகா தனது நிதிநிலை அறிக்கையில், குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளதால், திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கர்நாடகா அரசை ஒன்றிய அரசு கேட்டுக்கொள்கிறதா?

ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் டுடூ பதில்: (அ) மற்றும் (ஆ): கர்நாடகாவின் மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கொள்கை அளவில் அனுமதி பெறுவதற்கு கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கி உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தல், மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொள்வது போன்ற நிபந்தனைகள் ஆகும். ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு, கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க மேற்கூரிய நிபந்தனை பொருந்தும்.
அதன்பிறகு, மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, மற்றும் விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு அனுப்பப்பட்டது. காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது, மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் பிஷ்வேஸ்வர் டூடு கூறினார்.
இதேபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? எனவும் வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு அளித்த பதில்: மற்றும் (ஆ): 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் மார்ச் 28, 2019 அன்று இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்ததால், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 தொடர்பான கள நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அலகுகளின் எல்லைகளை வரையறுக்கும் தேதி 31.12.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (இ) மற்றும் (ஈ): தரவு சேகரிப்புக்கான மற்றும் இணையப் பயன்பாடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு மொபைல் செயலி மற்றும் இணையதள பயன்பாடு (CMMS) உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி பயன்பாடுகள், இணைய பயன்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக இதுவரை 24.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது இவ்வாறு மத்திய அரசு பதில் அளித்தது.












Click it and Unblock the Notifications