நீதிபதிகளின் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஊடகங்களை ஜனநாயகத்தில் ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்கும் தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு விதிகள் தொடர்பாக அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவ தேர்தல் ஆணையமே காரணம் என்றும் இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என்று சரமாரியாக விமர்சித்தனர்.

தேர்தல் ஆணையம் வழக்கு
இந்நிலையில், நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடிந்து 20 நாட்கள் கடந்த பிறகு கொரோனா அதிகரிக்கத் தேர்தல் ஆணையம் காரணம் என்றும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றத்தை உயர் நீதிமன்றம் சாட்டியுள்ளது. நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவித்த கருத்துக்களை ஊடகங்களும் விவாதிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தடை விதிக்க முடியாது
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்கும் தடைவிதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும், இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், ஊடகங்கள் ஜனநாயகத்தில் ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு அமைப்பு. அவை உயர் நீதிமன்றங்களில் விவாதங்கள் குறித்து செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்றனர்.

நீதிபதிகள் அறிவுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சென்னை ஹைகோர்ட் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைச் செயல்படுத்தவில்லை என்று மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அவர்களின் கருத்துக்களில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. நீதிமன்ற விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும், இதற்கா தேர்தல் ஆணையம் செயல்பாடு மோசமாக உள்ளதாக அர்த்தம் இல்லை" என்று தெரிவித்தனர்.

ஒத்தி வைப்பு
மேலும் உயர் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் என்றும் அவர்களை மனச்சோர்வு அடைய வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணையை முடித்து மிக விரைவில் தீர்வு வழங்குகிறோம் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications