''சரியான திசையில் போறீங்க'' மோடிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த மெஹபூபா முப்தி.. எதுக்கு தெரியுமா
டெல்லி: பாகிஸ்தான் பிரதமரை பிரதமர் மோடி அணுகுவது சரியான திசையில் செல்வதற்கான ஒரு படியாகும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
இது உரையாடல் மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு வழிவகுக்கும் என்றும் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.
PM Modi reaching out to his Pakistani counterpart is a step in the right direction. As Vajpayee ji famously said, one can change his friends but not neighbours. I hope this leads to a process of dialogue & reconciliation. Kashmir needs healing. pic.twitter.com/MrU33iHKFg
— Mehbooba Mufti (@MehboobaMufti) March 24, 2021
ஒரு அண்டை நாடு என்ற முறையில் பாகிஸ்தானுடன் நல்ல உறவை, நட்பை உருவாக்க விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியா- பாகிஸ்தான் உறவு
நீண்ட காலமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுக உறவு காணப்படுவது இல்லை. ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் தலையீடு, பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது என்று பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்தியா சொல்வதைபோல்தான் பாகிஸ்தானும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக நல்லுறவு ஏற்படும் நிலை மலர்ந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் மீண்டும் நல்லுறவு ஏற்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இம்ரான்கானுக்கு வாழ்த்து கூறிய மோடி
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது அவர் குணமடைய முதல் ஆளாக வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி. இது தவிர இந்தியாவில் நடந்த இண்டஸ் கமிஷன் மீட்டிங்கில் பாகிஸ்தான் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று பாகிஸ்தானில் தேசிய தினம் கொண்டாடப்பட்டதையொட்டி பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
நட்புறவு பேண விரும்புகிறோம்
அதில், ' பாகிஸ்தான் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு அண்டை நாடு என்ற முறையில் பாகிஸ்தானுடன் நல்ல உறவை, நட்பை உருவாக்க விரும்புகிறோம். ஆனால் பயங்கரவாதமும் விரோதமும் இல்லாத நம்பிக்கையின் சூழல் அதற்கு மிகவும் இன்றியமையாதது என்று பிரதமர் கூறி இருந்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடியின் செயல் பாராட்டுக்குரியது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
மோடிக்கு மெஹபூபா முப்தி பாராட்டு
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் மெஹபூபா முப்தி கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரை அணுகுவது சரியான திசையில் செல்வதற்கான ஒரு படியாகும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜி பிரபலமாக கூறியது போல், ஒருவர் தனது நண்பர்களை மாற்ற முடியும்; அண்டை வீட்டாரை அல்ல. இது உரையாடல் மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். காஷ்மீருக்கு சிறப்பு சிகிச்சைமுறை தேவை என்று கூறியுள்ளார்.