சனிக்கிழமையே பெட்ரோல் போட்டு வச்சுக்கணுமா? பரவும் பங்க் மூடல் செய்தி.. PIB நடத்திய அதிரடி ஆய்வு
சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு புதிய தகவல் காட்டுத்தீ போல பரவி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. அதாவது, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட உள்ளதாக ஒரு செய்தி வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் உலா வந்து கொண்டிருக்கிறது.. இது உண்மையா? தீயாய் பரவும் இந்த தகவல் குறித்து மத்திய அரசு தந்துள்ள விளக்கம் என்ன தெரியுமா?
பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார மற்றும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அண்மையில் முக்கிய வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் (Car Pooling) என்றும், பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்..
பிரதமர் மோடி சொன்னது என்ன
இந்த நிலையில், பிரதமரின் இந்த சிக்கன நடவடிக்கை அழைப்பை தொடர்ந்து, இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும், அதன்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்றும் அந்த வைரல் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இதனால் வார விடுமுறை நாட்களில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. சனிக்கிழமை இரவே பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று எரிபொருளை நிரப்ப வேண்டுமோ என்ற பதற்றமும் உருவானது..
இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (PIB) உண்மை கண்டறியும் குழு இது குறித்து தீவிர ஆய்வு நடத்தியது.
பெட்ரோல் பங்குகள்
இப்போது மத்திய அரசு மற்றும் பிஐபி (PIB) தரப்பில் இருந்து இந்த விவகாரத்திற்கு மிக தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் போலியானது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், ஆதாரமில்லாத இதுபோன்ற செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் பிஐபி கேட்டுக்கொண்டுள்ளது.. பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் எரிபொருளை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டுமே கோரிக்கை விடுத்தாரே தவிர, பெட்ரோல் பங்க்குகளை மூடச் சொல்லி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்
அதுமட்டுமல்ல, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வருவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சங்கமும் தன்னிச்சையாக பெட்ரோல் பங்க்குகளை மூட முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதனால் வழக்கம் போல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் எந்தவித தங்குதடையுமின்றி முழு நேரமும் இயங்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.. பொதுமக்கள் இந்த போலி செய்தியால் தேவையில்லாமல் அச்சப்பட தேவையில்லை என்றும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!!












Click it and Unblock the Notifications