சென்னை: தலைகீழாக புரட்டிப்போடும் விஜயின் முடிவு.. இதுமட்டும் நடந்திட்டா போதும்!
சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் புதிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர், ஓசூர், மதுரை போன்ற நகரங்களில் கட்டுமான அனுமதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் தொடர்பாக விரைவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்கின்றனர்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறை தற்போது புதிய அரசிடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. ஒவ்வொரு துறை அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து ஆலோசனை செய்து வரும் விஜய், விரைவில் ரியல் எஸ்டேட், பத்திர பதிவு, கட்டுமான ஒப்புதல் தொடர்பான கூட்டத்தையும் நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை என்பது வெறும் வீட்டு கட்டுமான துறை மட்டுமல்ல, இது மாநிலத்தின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளில் ஒன்று. இந்தத் துறை மூலம் சிமெண்டு, இரும்பு, மின்சார உபகரணங்கள், இன்டீரியர் வடிவமைப்பு, போக்குவரத்து மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட துணைத் துறைகள் வளர்ச்சி பெறுகின்றன.
தமிழ்நாடில், குறிப்பாக சென்னைக்கு நாட்டிலேயே வளர்ந்த நகர பொருளாதாரம் என்ற நிலையை அடைய அதிகப்படியான வாய்ப்புள்ளது. இதை சாத்தியப்படுத்த புதிய அரசுக்கு அதற்கான பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்துறையினர் கருதுகின்றனர்.
புதிய நகர திட்டமிடல் அவசியம்
சென்னை நகரம் இனி பரப்பளவில் மட்டுமே விரிவடையும் பழைய வளர்ச்சி முறையில் செல்ல முடியாது என்று ரியல் எஸ்டேட் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகர எல்லைக்குள் காலி நிலங்கள் குறைந்து வருவதும், உள்கட்டமைப்பு செலவுகள் அதிகரிப்பதும் புதிய நகர திட்டமிடலை அவசியமாக்கியுள்ளது.
இதனால் மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் முக்கிய சாலைகள் சுற்றுவட்டாரங்களில் அதிக Floor Space Index (FSI) வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு 3.25 FSI வரம்பும், சாதாரண குடியிருப்பு கட்டிடங்களுக்கு 2 என்ற வரம்பும் உள்ளது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களைப் போல FSI உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது விஜய் தலைமையிலான புதிய அரசு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வாய்ப்புள்ளது என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ள மேலாண்மை மற்றும் நீர் அமைப்பில் கவனம்
சென்னை கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வெள்ள பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் காலநிலை மாற்றம் மற்றும் வெள்ள மேலாண்மை தற்போது ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய கவலையாக மாறியுள்ளது.
நகர வளர்ச்சியுடன் இணைந்து பெரிய வடிகால் அமைப்புகள், ஏரிகள், நீர்வழிகள் மற்றும் நகர திட்டமிடலை ஒருங்கிணைத்து நீண்டகால வெள்ள மேலாண்மை திட்டம் உருவாக்க வேண்டும் என்று கட்டுமானத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.
இதுபோன்ற திட்டங்கள் இல்லாமல் நகர வளர்ச்சி தொடர்ந்தால், எதிர்காலத்தில் சென்னை மேலும் கடுமையான உள்கட்டமைப்பு சவால்களை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
GCC மையமாக மாறும் சென்னை
சென்னை தற்போது Global Capability Centre (GCC) மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் Grade-A அலுவலக வளாகங்களுக்கு விரைவான அனுமதி, கலப்பு பயன்பாட்டு நகர அமைப்புகள் மற்றும் சிறந்த பொது போக்குவரத்து வசதிகள் அவசியம் என்று ANAROCK Property Consultants நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டால், சென்னை இந்தியாவின் முன்னணி முதலீட்டு நகரங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கருதுகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தையும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர். சென்னை நகரத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க இந்த திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புதிய அரசு இந்த திட்டத்தை பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசின் முடிவுகள் முக்கியம்
தமிழ்நாட்டின் நகர வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு சூழலை தீர்மானிக்கும் முக்கியமான கட்டத்தில் தற்போது விஜய் தலைமையிலான அரசு உள்ளது.
ரியல் எஸ்டேட் துறை முன்வைத்துள்ள கோரிக்கைகள் வெறும் கட்டுமானத் துறையின் தேவைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்கால நகர வளர்ச்சி மற்றும் பொருளாதார திசையை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.














Click it and Unblock the Notifications