இப்படியா மிட் நைட்டில் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது? மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்வு செய்து அறிவித்திருப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முடிவை ஒத்திவைக்க ராகுல் காந்தி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உள்ளடக்கிய குழு நேற்று கூடியது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பிப்ரவரி 19-ல் நடைபெற உள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ஆனால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் அறிவிக்கப்பட்டார்; அதேபோல தேர்தல் ஆணையர்களில் ஒருவராக விவேக் ஜோஷியும் நியமிக்கப்பட்டார். இதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தேன்.
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் விசாரணைக்கு வர இருக்கும் போது எதற்காக தலைமை தேர்தல் ஆணையரை அவசரமாக தேர்வு செய்ய வேண்டும்?
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அந்த உத்தரவையும் மீறி தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டார்; இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது மத்திய அரசு. அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் கொள்கைகளை நிலைநிறுத்துவது என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாக கருதுகிறேன்.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்து அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? இது மரியாதைக்குரிய செயல் அல்ல என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications