MIG-21 Retires: இன்றுடன் மிக்-21 போர் விமானத்துக்கு ஓய்வு.. 60 ஆண்டுகளுக்கு மேலாக பல போர் கண்ட சிங்கம்
டெல்லி: இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களில் முக்கிய அங்கம் வகித்து வந்த மிக்-21 போர் விமானத்துக்கு இன்று முதல் ஓய்வளிக்கப்படவுள்ளது. ரஷியாவின் தயாரிப்பான இந்த விமானம் இன்று முதல் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் போர், கார்கில் போர், ஆபரேஷன் சிந்தூர் என பல்வேறு போர்களில் மிக் 21 ரக விமானங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
விமானப் படையின் 23 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கடைசி மிக்-21 போர் விமானம் இன்று முதல் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப் படை நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில், இந்த விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இந்திய விமானப் படையில் இந்த ரக போர் விமானங்கள் சிறுத்தைகள் என்று அழைக்கப்பட்டு வந்தன.

இந்த விழாவில், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், விமானப் படையின் தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில், விமானப் படைத் தலைமை தளபதி அமர்பிரீத் சிங், மிக்-21 போர் விமானத்தை இயக்கவுள்ளார்.
போர்த் திறனை மேம்படுத்தும் வகையில், இந்திய விமானப் படை 870க்கும் மேற்பட்ட மிக்-21 ரக போர் விமானங்களை வாங்கியது. இந்த விமானங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போர், கார்கில் போர், பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களில் முக்கிய அங்கம் வகித்து வந்த கடைசி மிக்-21 போர் விமானத்துக்கு இன்று முதல் ஓய்வளிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications