பீகார் சட்டசபை தேர்தலில் 2 கோடி வாக்காளர் பெயர் நீக்கம்? ‛இந்தியா’ கூட்டணி சொன்ன தகவல்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போத வாக்காளர் பட்டியல் திருத்தத்ததுக்கான சிறப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதில் 2 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட உள்ளதாக ‛இந்தியா’ கூட்டணி கட்சியின் தலைவர்கள் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (Special Intensive Revision - SIR) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். 11 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 தலைவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். மொத்தம் 3 மணிநேரம் சந்திப்பு நடந்தது.

அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்த பணிக்கு ஆட்சேபனைகளை தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் அவசியம், கால அவகாசம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளோம். கடைசியாக 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22 ஆண்டுகளில் நான்கு அல்லது ஐந்து பீகார் சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அப்படியானால் அந்தத் தேர்தல்களில் தவறான வாக்காள் பட்டியல் இருந்ததா ?" என்று கேட்டுள்ளோம்.
நாட்டின் இரண்டாவது பெரிய வாக்காளர் மாநிலமான பீகாரில் 8 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான திருத்தப் பணி வெறும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வேலைக்காக வெளியூர் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கணக்கெடுப்பவரின் அழைப்புக்கு உடனடியாக வரமுடியாது. இதனால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட உள்ளது.
வாக்குரிமை பறிப்பு என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான மிகக் கடுமையான தாக்குதல். இரண்டு முதல் மூன்று கோடி பேர் வரை, குறைந்தபட்சம் இரண்டு கோடி பேராவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். தேர்தலுக்கு நெருக்கமான நேரத்தில் இதை ஏன் செய்ய வேண்டும்?.
தேர்தல் ஆணையம் ஏன் ஆதார் அட்டையை பயன்படுத்தவில்லை? ஏனெனில், இதற்கு முன்பு வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டது. திட்டமிடப்பட்ட திருத்தம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எங்கள் கருத்துக்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தயாராக இல்லை’’ என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் மனோஜ் ஷா கூறுகையில், ‛‛இந்த சந்திப்பு சுமூகமாக இல்லை.சுமார் 20% மக்கள் தொகை பிழைப்புக்காக புலம் பெயர்கின்றனர். அவர்கள் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது என்பதை விட பெயர் நீக்குவதை தான் அடிப்படையாக கொண்டது’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி, மாநிலத்தில் பணி செய்யும் மக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள். பிழைப்புக்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் வாய்ப்பு இருக்காது’’ என்று குற்றம்சாட்டினார்.
‛இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‛‛அரசியலமைப்பின் 326வது பிரிவின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இந்த சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு திருத்தப் பணியில் கள அளவில் பங்கேற்பதற்காக 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை முகவர்களை (Booth Level Agents - BLA) நியமித்த அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்தது.
பீகாரை எடுத்து கொண்டால் தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இங்கு பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி முக்கிய இடம் வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணியில் பிரதான கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் உள்பட பிற கட்சிகள் இருக்கின்றன. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தற்போது பீகாரில் பாஜக கூட்டணிக்கு 131 எம்எல்ஏக்கள் உள்ளன. இதில் பாஜகவுக்கு 80, ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45, எச்ஏஎம் (எஸ்) கட்சிக்கு 4 , சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் அடங்கும்.
எதிர்க்கட்சியான ‛இந்தியா' கூட்டணியை எடுத்து கொண்டால் 111 எம்எல்ஏக்கள் உள்ளன. ஆர்ஜேடி கட்சிக்கு 77 பேர், காங்கிரஸ் க்டசிக்கு 19 பேர், சிபிஐ (எம்எல்) கட்சிக்கு 11 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளன. இவர்கள் தவிர ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications