மொத்த உலகிற்கும் அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு வரியில் போட்ட மெசேஜ்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பதிவு
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இலக்குகளை இந்தியாவின் முப்படைகள் தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மொத்த உலகிற்கும் இது தொடர்பாக ஒரு வரியில் ஒரு மெசேஜை பகிர்ந்துள்ளார். அது பற்றி பார்ப்போம்.
பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தக்க பதிலடி கொடுக்க தயாராகி வந்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதை உணர்ந்த பாகிஸ்தானும் சில ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியதுடன், போர் விமானங்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடந்தது. இந்த கூட்டம் முடிந்த உடன், மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
போர்க்கால ஒத்திகையை பொறுத்தவரை, எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, ஆயுதக்கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறைப்பது, எதிரி நாட்டு ஏவுகணை வரும்போது மின் விளக்குகளை அணைப்பது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது என்பது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிப்பது ஆகும். போர்ச்சூழலை உளவியல் ரீதியாக எதிர்கொள்ள தயார்படுத்த இந்த ஒத்திகை நடத்தப்படும். போர்க்காலங்களில் 244 இடங்கள் சிவில் பாதுகாப்பு இடங்களாக கடந்த 2010-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு இருந்தது . அந்த இடங்களில் இன்று போர் ஒத்திகை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
போர் ஒத்திகையில் கவனத்தை திருப்பிய இந்தியா, இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலையில் பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களிலும் துல்லிய தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) கோட்டையான பஹாவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பயிற்சி தளமான முரிட்கே உள்ளிட்ட பயங்கரவாத தளங்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகளுக்கு ஒரு வரியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். சமூக ஊடகங்களில் ஜெய்சங்கர் கூறுகையில், "இந்த உலகம் பயங்கரவாதத்தை ஒரு துளி கூட சகித்துக் கொள்ளக்கூடாது" என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம், அல்ஜீரியா, கிரீஸ், சியரா லியோன், கயானா, பனாமா, ஸ்லோவேனியா மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகளுடன் பாகிஸ்தான் தொடர்பாக ஜெய்சங்கர் பேசினார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று, இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் மாறிக்கொண்டே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications