கே.என்.நேரு சின்னபுள்ள தனமா பேசுறாரு... பாவம் அவருக்கு விவரம் தெரியாது -அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லி: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த விவகாரத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சிறுபிள்ளை தனமாக பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்புக்கு பிறகு டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் நடக்காததை எல்லாம் நடத்திக்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் கடிதம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பான கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் இன்று நேரில் வழங்கினார். அவருடன் அதிமுக எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதேபோல் முதல்வர் அளித்த கடிதத்தை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். முதல்வர் கடிதம் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

வரலாறு
இதனிடையே மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பு என்றும், இந்த அறிவிப்பு விவசாயிகள், டெல்டா பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திமுகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

விவரம் தெரியாது
மேலும், நடக்காததை எல்லாம் நடத்திக்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்து கொண்டிருப்பதாகவும் தமிழகமே மகிழ்ச்சியில் இருக்கும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் சோகத்தில் இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். வேளாண் மண்டலம் தொடர்பாக முதல்வர் அறிவித்த விவகாரத்தில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு விவரம் தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும், அவரை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் குழந்தை தனமாக பேசுவதாகவும் விமர்சித்தார்.

நக்கல்
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அமைச்சராக இருந்தவர், நிர்வாகம் தெரிந்தவர் என நினைத்தால் அவர் சிறுபிள்ளை தனமாக பேசுவதும் அறிக்கை விடுவதும் வருத்தம் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனிடையே ஹைட்ரோ கார்பன் மற்றும் வேளாண் மண்டலம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக கூறி அதற்கு நேரு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications