நிலுவையில் 5 கோடி வழக்கு.. நீதிமன்றத்தில் 5,850 காலி இடங்கள்.. நாடாளுமன்றத்தில் கனிமொழி பளீர் கேள்வி
டெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 30% நீதிபதிகள் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு இவர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சமீபத்தில் கிரன் ரிஜிஜூ கூறியிருந்தார். அதேபோல இந்த வழக்குகள் நிலுவைக்கு காரணம் நீதிபதிகள்தான் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கொலீஜியம் முறையும் இந்த வழக்குகள் நிலுவைக்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு இந்த முறையை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
வழக்குகள் தேக்கமும் கொலீஜியமும்
இது குறித்து சமீபத்தில் அவர் பேசுகையில், "உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலுவை வழக்குகள் எண்ணிக்கை விரைவில் குறையும் என்று நினைக்கிறேன். 1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. ஆனால் தற்போது கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதனை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று குறிப்பிட்டிருந்தார்.
மாவட்ட நீதிமன்றங்கள்
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கிரன் ரிஜிஜூ, "டிசம்பர் மாதம் 19ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நீதித்துறை அதிகாரிகளின் 5,850(23.3%) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது" என கூறியுள்ளார். வழக்குகளின் தேக்கத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் கொலீஜியத்தை அமைச்சர் காரணம் காட்டியிருந்த நிலையில் தற்போது நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் பட்டியலை வெளியிட்டிருப்பது அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
உச்சநீதிமன்றம்
எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் மேலும் கூறியதாவது, "மொத்தமாக மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,042 பணியிடங்கள் இருக்கின்றன. அதேபோல உயர்நீதிமன்றங்களை பொறுத்த அளவில், புதியதாக 351 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயர்நீதிமன்றங்களிலும் சுமார் 1,108 பணியிடங்களில் இருக்கின்றன. இதில் 775 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் மீதமுள்ள 333(30%) பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது, இது விரைவில் நிரப்பப்படும். உச்சநீதிமன்றங்களை பொறுத்த அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மொத்த பணியிடம் 34. தற்போது வரை 28 நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் 6 நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்" என அமைச்சர் கூறியுள்ளார்.
கபில் சிபில்
வழக்குகளின் தேக்கத்திற்கு கொலீஜியம்தான் காரணம் என்றும், எனவே கொலீஜியத்தை கலைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், "தற்போது அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைப்பற்றியுள்ளது. எல்லா துறையிலும் அவர்களுடைய சித்தாந்தம் கொண்ட ஆட்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நீதி துறையை கைப்பற்றி அதிலும் அவர்களுக்கு தேவையான ஆட்களை நியமித்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும். இதற்காகதான் கொலீஜியத்தை கலைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்" என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.