விவசாயிகளுக்கு நன்மையா...அமைச்சர் பொய் சொல்கிறார்...விவசாய சங்க தலைவர் குற்றச்சாட்டு
டெல்லி : வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என மத்திய அமைச்சர் தோமர் பொய் சொல்கிறார் என கிராந்திகாரி கிசான் சங்க தலைவர் தர்ஷன் பால் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து பார்லிமென்ட்டில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதற்கு எதிர்ப்பையும், 3 பகுதிகளில் மட்டும் சாலை மறியல் நடத்தாதது ஏன் என்ற விளக்கத்தையும் விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கிராந்திகாரி கிசான் சங்க தலைவர் தர்ஷன் பால் சிங், பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் பிரச்னைக்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டு, திருத்தம் கொண்டு வர தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்தார். ஆனால் நேற்று பார்லிமென்டில் வேளாண் சட்டங்கள் பற்றி பேசுகையில், இது விவசாயிகளுக்கு நன்மை தரக் கூடியது என்கிறார். அது பொய். அதனை நாங்கள் கண்டிக்கிறோம். எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் சர்வதேச பிரபலங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையில் பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் தனது பேட்டியில், உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் டெல்லி பகுதிகளில் எங்கள் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் வன்முறையை பரப்ப முயற்சிப்பதாக எங்களிடம் ஆதாரம் உள்ளது. அதனால் தான் அப்பகுதிகளில் சாலை மறியலை நடத்த வேண்டாம் என முடிவு செய்தோம்.
நேற்று பார்லிமென்ட்டில் பேசிய வேளாண் அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தை அவமதிக்கும் வகையில், ஒரே ஒரு மாநில விவசாயிகள் மட்டும் தான் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாடு முழுவதும் நடந்த சாலை மறியல் போராட்டமே விவசாயிகள் அனைவரும் அதனை எதிர்க்கிறார்கள் என்பது புரிந்திருக்கும் என்றார்.
ராகேசின் இந்த கருத்து குறித்து தெரிவித்துள்ள தர்ஷன் பால் சிங், உ.பி., உத்திரகாண்டில் நடந்த வன்முறைக்கு சிலர் காரணம் என கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து. எங்களுடன் பேசிய பிறகு அவர் கருத்து கூறி இருக்கலாம். இது அவசரப்பட்டு கூறிய கருத்து என்றார்.