9 ஆண்டுகளில் மோடி 60 முறை.. மத்திய அமைச்சர்கள் 400 முறை.. விசிட் போனது வடகிழக்கு மாநிலங்களுக்கு!
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி 60 முறையும் மத்திய அமைச்சர்கள் 400-க்கும் மேற்பட்ட முறையும் பயணம் மேற்கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக பெரும் வன்முறை வெடித்து 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. மணிப்பூர் வன்முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் புகார்.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துரைக்கும் பூர்வோதயா மாநாட்டை அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கி வைத்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
அப்போது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், வடகிழக்கு மாநிலங்கள் கிளர்ச்சி, மோதல் போன்றவற்றுக்காகவே செய்திகளில் அறியப்பட்டதாகவும், இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்நிலைமை மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாகவும், அமைச்சர்கள் 400-க்கும் மேற்பட்ட முறை வந்துள்ளதாகவும், கொரோனா இல்லையென்றால் பிரதமர் 100 முறையாவது வந்திருப்பார் எனவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிபுரா மற்றும் மேகாலயாவில் இருந்து ஆயுதப்படை சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 8,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2014-22 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 63% குறைந்து 3,195 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications